கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு...
கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்த பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்த எடியூரப்பா, கடந்த 2019 ஆம் ஆண்டு நான்காவது முறையாக கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பொறுப்பெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகுமாறு யாரும் தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என எடியூரப்பா விளக்கம் அளித்தார்.
இதையடுத்து கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அரவிந்த் பெல்லத், பசவராஜ் பொம்மை மற்றும் முருகேஷ் நிரானி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இந்நிலையில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது குறித்து பெங்களூரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக பார்வையாளர்களான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதனை அறிவித்தார்.
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார். அதை தொடர்ந்து புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பசவராஜ் பொம்மைக்கு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பசவராஜ் பொம்மை இன்று புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.