கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான சீரான கொள்கையை வகுக்குமாறும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான மூன்று நீதிகள் அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

 நாடு முழுவதும் கொரோனாவுக்கு 3 லட்சத்து 85 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்குவது சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் மற்ற நோய்களால் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.

 இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.மேலும் இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், இழப்பீடு தொகையை 6 வாரங்களுக்குள் நிர்ணயிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.