உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்

தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய பெகாசஸ் மென்பொருளை, மத்திய அரசு, இந்திய அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தி உள்ளது என ராகுல் காந்தி சாடியுள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்
இஸ்ரேலின் பெகாசஸ் கருவி மூலம் இந்தியர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதனை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் மளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பெகாசஸ் உளவு கருவியை பயன்படுத்த மத்திய அரசுக்கு யார் அதிகாரமளித்தது என கேள்வி எழுப்பினார்.
பெகாசஸ் கருவியை தயாரித்த இஸ்ரேல் அரசால் அது ஒரு ஆயுதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த ஆயுதம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். ஆனால் பிரதமர் மோடி அரசு பெகாசஸ் கருவியை இந்திய அரசுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இது குறித்து மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்தியர்களுக்கு எதிராக உளவு கருவியை பயன்படுத்த மத்திய அரசுக்கு யார் அதிகாரமளித்தது எனவும் சாடினார். மத்திய உள் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ராகுல் வலியுறுத்தினார்.