விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்ற மத்திய அமைச்சரின் மகனை மோடியும், யோகி ஆதித்யநாத்தும் பாதுகாக்கின்றனர்- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
லக்கீம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்ற மத்திய அமைச்சரின் மகனை உத்தரப்பிரதேச அரசு பாதுகாப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய அவர், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மத்திய அமைச்சரை கைது செய்ய வலியுறுத்துவதாக தெரிவித்தார். ஆனால் நரேந்திர மோடியும், யோகி ஆதித்யநாத்தும் அவரை பாதுகாத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஏர் இந்தியாவை மத்திய அரசு விற்றதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். நரேந்திர மோடி தான் பயணிப்பதற்காக இரண்டு விமானங்களை 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும், ஆனால் மொத்த ஏர் இந்தியாவையும் வெறும் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாகவும் குற்றம்சுமத்தினார்
மேலும் லக்னோ வர முடிந்த பிரதமருக்கு, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற லகிம்பூர் செல்ல முடியவில்லை” என்றார்.