இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒன்றுசேர பிரதமர் மோடி அழைப்பு...

மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இளைஞர்களுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒன்றுசேர பிரதமர் மோடி அழைப்பு...

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல், மாத இறுதி ஞாயிற்று கிழமைகளில், மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். 
இன்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்து, அந்த போரில் வீரமரணமடைந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்படி அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாது ஒலிம்பிக் சென்றுள்ள வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக,  குழுக்களுடன் வெற்றி முழக்கமிட்டு சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்ந்து பேசிய மோடி, மன்கிபாத் குறித்து கருத்து தெரிவிப்போரில் 75 சதவீதம் பேர் 35 வயதுக்கும் கீழானோர் என்றும், இளைஞர்களுடனான இந்த நிகழ்ச்சி நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மோடி, வான்வழி பொறியியல் பட்டதாரியான மணிப்பூர் இளைஞர் டி. எஸ் ரிங்ஃபாமி யங் குறித்து பேசிய மோடி, யங் முறையான பயிற்சி, விவசாயிகளுடன் தற்போது ஆப்பிள் சாகுபடி செய்வதாக பெருமிதம் தெரிவித்தார். இதேபோல் திரிபுரா இளைஞர் ஒருவரும் கொரோனா காலக்கட்டத்தில் இலந்தைப்பழம் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக கூறியுள்ளார். 

இதேபோல் கொரோனா காலக்கட்டத்தை பலர் சிறப்பாக கையாண்டிருப்பதாகவும், ஒடிசா தினக்கூலி தொழிலாளியான ஐசக் முண்டா யூடியூப் சேனலை துவக்கி பயனுள்ள தகவல்களை பகிர்ந்து அதிக வருமானம் ஈட்டி வருவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பெண்களின் தொழில் வளர்ச்சி நிலை குறித்து பேசிய மோடி, நீலகிரியை சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்ற பெண் ஆம்புரக்ஸ் என்ற திட்டத்தை துவக்கி, மலையடிவாரத்தில் ஆம்புலன்ஸ் சேவைக்காக தவிக்கும் மக்களுக்கு 6 ஆட்டோக்கள் மூலம் உதவி வருவதாக பாராட்டி உள்ளார்.