1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் அரை நாள்தான்... கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...
புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் 6 ஆம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் அரை நாள் நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டது. இதனிடையே கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் சுழற்சி முறையில் அரை நாள் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு வரும் 6 ஆம் தேதியில் இருந்து வகுப்புகள் நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 6 ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் சுழற்சி முறையில் அரை நாள் நடைபெறும் என்றும் இதேபோல் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் அரை நாள் நடைபெற்று வரும் நிலையில் 6 ஆம் தேதியில் இருந்து முழு நாள் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவித்தார்.