கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி ஒன்றே தீர்வு: பிரதமர் மோடி பேச்சு

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி ஒன்றே நமது நம்பிக்கை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி ஒன்றே தீர்வு: பிரதமர் மோடி பேச்சு

கோவின் குளோபல் கான்க்ளேவ் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தொழில்நுட்ப சேவையின் மூலம் நாம் கொரோனா தொற்று பரவலை கணக்கிட முடிந்ததாகவும், 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு உலகம் மிகப்பெரிய பேரிடரை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் தடுப்பூசி செலுத்த கோவின் இணையதளம் மிகப்பெரிய பங்காற்றி உள்ளதாக தெரிவித்த பிரதமர், உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளும் கோவின் இணைதளத்தை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு முறையில் இந்தியா முதலில் இருந்தே தொழில்நுட்ப சேவையை அணுகியதன் மூலம் பெரிய இடர்பாடுகளை சந்திக்கவில்லை என்றும், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுவதே இந்தியாவின் பண்பாடு என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர், கோவின் இணையதளத்திற்கான சேவை விரைவில் உலகமயமாக்கப்படும் என்றும், இதன் பயன்பாட்டிற்கு 67 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.