கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில், 3 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 76 வயது முதியவர்.
விளையாட்டு, போட்டி இவைகளெல்லாம், பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரிப் பருவத்துடன் சரி. அதையும் தாண்டி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்து வரும் வீரர், வீராங்கனைகள் கூட 40 அல்லது, 50 வயது வரைதான் நீடிக்க முடிகிறது. அதன் பின்னர் அவர்கள் விளையாட்டுத்துறையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.
பொதுவாக 50 வயதைக் கடந்து விட்டாலே, நடப்பதே சிக்கலாகிப் போகிறது நம்மில் பலருக்கும். ஆனால் 76 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், இன்றும் இளைமையுடன், தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவருக்கு வயது 76. சிறுவயது முதல் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட இவர், ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார். பள்ளிப் பருவத்தில் இருந்தே தடகளப் போட்டியில் பங்கேற்று, மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், விளையாட்டுப் போட்டிகள் மீது கொண்ட ஆர்வத்தால், வயதானபோதும், வயது முதிர்ந்தோர்களுக்கான போட்டிகளில் பங்கேற்று, அதிலும் பதக்கங்களை குவிந்து வருகிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற 43-வது தேசிய தடகள மாஸ்டர் சாம்பியன் போட்டியில் பங்கேற்று, மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று, 3 தங்கப் பதங்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டுத் துறையின் மீது இவர் கொண்ட ஆர்வத்தால், தனது கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்து, ஏராளமான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளையும் உருவாக்கி வருகிறார்.
நன்கு ஓவியம் வரையும் இவர், தனது ஓவியத் திறமையால் வருவாய் ஈட்டி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்துவதுடன், தனது போட்டிக்கான செலுவுகளையும் கவனித்துக் கொள்கிறார்.
விளையாட்டுத் துறையில் இளைஞர்களுக்கு வழங்குவது போன்று, நிதியுதவி, சலுகைகள், ஓய்வூதியம் போன்றவற்றை, தன்னைப் போன்ற முதியவர்களுக்கும் வழங்கி ஊக்குவித்தால், தங்களது வாழ்க்கை சிரமம் இல்லாமல் செல்லும் என்று, அரசுக்கு இவர் கோரிக்கை வைத்துள்ளார்.