நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி...

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் அசத்தலாக வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து கோப்பையை கைப்பற்றியுள்ளது.
நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி...
Published on
Updated on
1 min read

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன. குறிப்பாக அக்சர் படேலின் பந்துகளை சமாளிக்க  முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் நியூசிலாந்து அணி 17 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com