ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானுக்கு குவியும் வாழ்த்து...

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானுக்கு குவியும் வாழ்த்து...

32-வது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. பளுதூக்கும் போட்டியின் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில், பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோ எடையையும் தூக்கினார். இதன் மூலம் மொத்தம் 202 கிலோ எடையைத் தூக்கி 2-ம் இடம் பிடித்த அவர், வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.


ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மீராபாய் சானுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சர் பிரண் சிங், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள் பிரதமர் மோடி, மீராபாய் சானுவின் அற்புதமான செயல் திறனால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாகவும், மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார். ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக்  பளுதூக்கும் போட்டியை வீட்டில் இருந்தபடி டி.வி.யில் கண்டு ரசித்த மீராபாய் சானுவின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றதை கொண்டாடி மகிழ்ந்தனர்.