ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை : காலிறுதிக்கு பூஜா ராணி தகுதி...

ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை : காலிறுதிக்கு  பூஜா ராணி தகுதி...

32ஆவது ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கின் 6ஆவது நாளான இன்று, மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 75 கிலோ எடைப்பிரிவில் களம் கண்ட இந்தியாவின் பூஜா ராணி, அல்ஜீரியாவின் சைப் இச்சார்க் உடன் மல்லுக்கட்டினார். இதில் ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

அதேபோல், மகளிர் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்ற உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் தீபிகா குமாரி, முதல் போட்டியில் பூடான் வீராங்கனை கர்மாவை, 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில், அமெரிக்க வீராங்கனை முசினோ ஃபெர்னாண்டஸை 6-4 என வீழ்த்திய தீபிகா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.