வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்...கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்...கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

மேட்டூர் அணையிலிருந்து  வெளியேற்றப்படும் நீரின் அளவு  விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம்  கனஅடியாக அதிகரித்துள்ளது. 

நீர் திறப்பு:

கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் கடந்த சில நாட்களாக காவிரி வழியாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 46 ஆயிரத்து 385 கன அடி நீரும் என மொத்தம் 66 ஆயிரத்து 385 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. 

ஓகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு:

இதற்கிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழைபெய்வதால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

வெளியேற்றப்படும் நீர்:

இந்தநிலையில், மேட்டூர் அணையில் நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் தொடர்ந்து முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி ஆக உள்ளது.

எச்சரிக்கை:

மேட்டூர் அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும் , 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com