வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணைக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணைக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணைக்கு தடையில்லை:  சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நடப்புக் கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது.

இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதா என, விளக்கமளிக்கும்படி, அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி  பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு  வந்த போது, இந்த அரசாணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் வன்னியர் உள்ஒதுக்கீடு காரணமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்திரம்  வாதாடினார். 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கை ஆகஸ்ட் 2 வது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.