100 அடி ஆழத்திற்கு திடீரென உள் வாங்கிய நிலம்...அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 100 அடி ஆழத்திற்கு நிலம் திடீரென உள் வாங்கியதால் கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். 

கூடலூர் அடுத்த அத்திக்குன்னா மட்டத்துப்பாடி என்னும் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த வெள்ளிக் கிழமை 30 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் முகமது குமரத்துல்லா தலைமையிலான அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பகுதியில் மூடப்பட்ட கிணறு காரணமாக நிலம் உள்வாங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. 

இந்நிலையில், ஏற்கனவே நிலம் உள் வாங்கிய அதே பகுதியில், சுமார் 100 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து, இந்த பகுதியில் வசித்து வந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com