தமிழ்நாட்டில் 11-வது மெகா தடுப்பூசி முகாம்..! 50,000 இடங்களில் ஏற்பாடு..!
இம்மாத இறுதிக்குள் 100% இலக்கை எட்ட நடவடிக்கை...!
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 11 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் இலக்கை எட்ட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து, முகாம்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் 11-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது. ஒரு கோடி அளவில் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கும் நிலையில், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவரை 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.