"14 கோரிக்கைகள்".. என்னென்ன? -பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு!!

தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு அடிப்படையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் மீனவர் பிரச்சனை நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட  14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளர்.

"14 கோரிக்கைகள்".. என்னென்ன? -பிரதமர் மோடியை சந்தித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு!!

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்திலேயே சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசுமேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான நீர்வளப் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார். 

பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். 

கச்சத்தீவு மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பாகவும் பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி ஒதுக்கீடு செய்யவும் மற்றும் கூடுதலான ரயில் திட்டங்கள் செயல்படுத்தவும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெய்கார் - புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் ஜுன் 2022-க்குப் பின்பும் ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும் என  அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பை இந்தியாவில் தொடர நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

2 வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் கோரிக்கை மனுவில் வலியுற்தியுள்ளார்.

2022-ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் வழங்குவது குறித்தும்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கூடங்குளம் அணுமின் திட்டம் - செலவழித்த அணு எரிபொருள் நீக்குதல் தொடர்பாகவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் என 14 துறைகளுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.