நூல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் வேலை நிறுத்தம்..! நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்!

நூல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டம் செய்யப்போவதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் வேலை நிறுத்தம்..! நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்!

திருப்பூர்,  மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் கொடுத்து அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்த நிலையில், நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூன் 5-ந் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார்  2 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களுக்கு இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் 50 சதவீத உற்பத்தி வேலை நிறுத்தம், முழுமையான வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களை செய்தும் நூல் விலை குறைக்கப்படாத நிலையில் 15 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளனர். 

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடிக்கு ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.