ஸ்பெயினிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட  58 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள்.! இருவர் கைது.! 

ஸ்பெயினிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட  58 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள்.! இருவர் கைது.! 
Published on
Updated on
1 min read

ஸ்பெயின் நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 58 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை  பன்னாட்டு விமான நிலைய தபால் சரக்ககப் பிரிவுக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வரும் பார்சலில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தபால் சரக்ககப் பிரிவுக்கு வந்த பார்சல்களை தீவிரமாக சோதனை செய்தனர். 

அப்போது ஸ்பெயின் நாட்டில் இருந்து புதுச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு பார்சல் வந்திருந்தது. அதில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக இருந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 2 வெள்ளி கவர்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது 994 பிங்க் நிற போதை மாத்திரைகளும் 249 ஸ்டாம்ப் போதை மாத்திரைகளும் இருந்தன. 

ரூ. 56 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் புதுச்சேரி ஆரோவில் முகவரிக்கு சென்று சோதனை செய்தனர். அந்த முகவரியில் திருநெல்வேலியை சேர்ந்த ரூபக் மணிகண்டன்(29), கோழி பண்ணையில் வேலை செய்யும் லாய் வைகஸ் (28) இருந்தனர். வீட்டில் சோதனை செய்த போது ஆந்திரா மாநில குண்டூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் கஞ்சாவை கைப்ப்ற்றினார்கள். 

இது தொடர்பாக மணிகண்டன், வைகஸ் ஆகியோரை கைது செய்தனர். ரூ. 58 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், ஸ்டாம்ப் மாத்திரைகள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணையில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் என தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com