அடுத்த மாதம் துவரம் பருப்பு விலை குறைய உள்ள நிலையில், அதிக விலை கொடுத்து கனடா மஞ்சள் பருப்பை வாங்குவதன் நோக்கம் என்ன என, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை வாங்காமல் கனடா மஞ்சள் பருப்பை அதிக விலை கொடுத்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ரேஷன் கடை துவரம் பருப்பை வாங்காமல், அதிக விலை கொடுத்து கனடாவிலிருந்து வாங்க உள்ளதாக வெளிவரும் தகவல்களைக் குறிப்பிட்டு, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ”ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - உச்ச நீதிமன்றம் காட்டம்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிச்சந்தையில் துவரம் பருப்பு விலை குறைய உள்ள நிலையில் அதிக விலை கொடுத்து கனடா பருப்பை வாங்குவதன் நோக்கம் என்ன? 60000 டன் பருப்பை கிலோ 134 ரூபாய்க்கு வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசிற்கு, 60 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு முழுதும் துவரை அறுவடை துவங்கியுள்ளது. அடுத்த மாதத்தில் புதிய துவரம் பருப்பு வெளிச்சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த நிலையில் 3 மாதத்திற்கு தேவையான 60000 டன் பருப்பு வாங்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.