குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய கோரிய வழக்கு...! விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம்..!

குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய கோரிய வழக்கு...! விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம்..!

சென்னையில்  குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கை விசாரணை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதால், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க கோரி கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் மீது வலையை போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுவதாகவும், அதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதுடன், சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதைப் போல, சென்னையிலும் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதால், சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிக்க : திமுக தான் என்னை கடத்தியது...அதிமுக கவுன்சிலர் பகீர்...!