தமிழ்நாட்டில் இரு வேறு இடங்களில் விபத்து.. தம்பதி, தந்தை, மகள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
தமிழ்நாட்டில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் தம்பதி, தந்தை, மகள் என 4 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலூரைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கல்யாணி ஆகியோர் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் விராலிமலை சென்றுள்ளனர்.
விராலூர் பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பொலிரோ வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கணவனும் மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் தனது 3 வயது மகள் சாய்சக்தி மற்றும் உறவினர் மகன் நிதிஷ்குமார் ஆகியோரோடு இரு சக்கர வாகனத்தில் சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து திடீரென மோதியது. இதில் குமரவேலு மற்றும் சாய்சக்தி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுவன் நிதிஷ்குமார், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.