லட்சங்களில் பரிசுகள் வெல்ல கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!

லட்சங்களில் பரிசுகள் வெல்ல கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!

மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரமாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த ‘ஈஷா கிராமோத்சவம்’குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜா, விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாக ‘ஈஷா கிராமோத்சவம்’ என்ற கிராமிய விளையாட்டு திருவிழாவை சத்குரு அவர்கள் 2004-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். வெறும் 4 தாலுக்காவில் மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது என கூறினார்.

இதையும் படிக்க : ரூ.225 கோடி மோசடி செய்த தனியார் ஏற்றுமதி நிறுவனம்...அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அதன்படி இந்தாண்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நடைபெறும் இப்போட்டிகளில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 150 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட அணிகளும், 2,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இத்திருவிழாவில் ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால், இருபாலருக்குமான கபாடி போட்டிகள் என 4 போட்டிகள் பிரதானமாக நடத்தப்படும். பல்கலைக்கழக வீரர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் வீரர்கள், தொழில் முறை வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க கிராமப்புற மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி செப்.23-ம் தேதி வரை கிளெஸ்டர், டிவிஸினல், பைனல் என 3 கட்டங்களாக நடத்தப்படும். பின்னர் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ஆதியோகி முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படவுள்ள இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) - ரூ.5 லட்சம், த்ரோபால் (பெண்கள்) - ரூ. 2 லட்சம், கபாடி (ஆண்கள்) - ரூ.5 லட்சம், கபாடி (பெண்கள்) - ரூ.2 லட்சம் பரிசு தொகைகள் வழங்கப்படும். மேலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் அணிகள்  https://isha.co/gramotsavam-tamil  என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.