நடுக்கடலில் சுழன்றடித்த சூறைக்காற்று...மீனவர்கள் அச்சம்
இராமநாதபுரம் தொண்டி அருகே நடுக்கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றால், கடல்நீர் சுழன்று மேகம் உறிஞ்சுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..இதனால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது.அதற்கு முன்பு நடுக்கடலில் திடீரென சூறாவளிக் காற்று சுழன்று அடித்துக்கொண்டு கரையை நோக்கி நகர்ந்து வந்தது.
அப்போது கடல்நீரை மேகங்கள் உறிஞ்சுவது போல் ஏற்பட்ட இந்த அரிதிலும் அரிதான காட்சியை கடற்கரையில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் ஒரு வித வியப்புடனும், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தால் பேரழிவு ஏற்பட்டு விடுமோ? என்ற ஒருவித அச்சத்துடனும் செய்வதறியாது திகைத்து நின்று பார்த்தனர்.
அப்போது கரையை நோக்கி நகர்ந்த சூறைக்காற்று அதிவேகத்தில் கரையை கடந்தபோது மீன்பிடி வலைகளை முழுவதுமாக சேதப்படுத்தியதால் அப்பகுதி மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வால் கடலோர கிராமங்களில் வசிக்கும் ஏராளமான மீனவர்கள் ஒருவித அச்சத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..