
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்கா, பெருநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் வயது 70 கூலித் தொழிலாளி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை செய்ய சென்ற இடத்தில் மின்சார மோட்டார் பெல்ட் அறுந்து கால் தொடையில் அடித்ததில் பலத்தகாயம் ஏற்பட்டு உள்ளது. காயத்திற்கு பல்வேறு இடங்களில் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் காயம் ஆறாமல் சீழ் வடிந்து உள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார். காலில் கடுமையான காயத்துடன் சிகிச்சை பெற வந்த வரதனை அரசு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்து, எக்ஸ்ரே, ஸ்கேன், உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து உள்ளனர்.
எக்ஸ்ரே, ஸ்கேன், பரிசோதனையில் வரதன் கால் தொடையில் எலும்புக்கு இடையில் ஏதோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசு மருத்துவமனை எலும்பு பிரிவு சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் கூலித் தொழிலாளியான வரதனுக்கு கால் தொடையில் நரம்புகள், தசைகள், சேதம் ஏற்படாதவாறு நவீன கருவி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து 10 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்புத் துண்டை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இரும்புத்துண்டை கண்டுபிடித்து அகற்றியதால் தொழிலாளி வரதன் உடல்நலம் தேறி வருகிறார்.