ஆடி அமாவாசை.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!!
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை:
ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை வழிபட்டால் அவர்களுடைய ஆசி கிடைக்கும் என கருதப்படுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்:
இந்த நிலையில், இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாலை 5-00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதணையும், 6-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு தர்ப்பணம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு:
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடற்கரையில் எள், அன்னம், தண்ணீர் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஏராளமானோர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.