வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கு... விசாரணைக்கு ஆஜரானார் எம்.ஆர் விஜயபாஸ்கர்...

சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கு... விசாரணைக்கு ஆஜரானார் எம்.ஆர் விஜயபாஸ்கர்...

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜய பாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த ஜூலை மாதம் 21-ஆம்தேதி வழக்குப்பதிவு செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக 55 சதவிகிதம் வரை சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஜூலை 22ஆம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் கணக்கில் காட்டப்படாத  25 லட்சம் ரூபாய் , பல சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி எனவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2-வது முறையாக சம்மனை அனுப்பினர். அதன்படி ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார் . அவரிடம் சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.