ஜெய் பீம் விவகாரத்தில் திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்:  நடிகர் கருணாஸ் எச்சரிக்கை

ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துக்கு திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் விவகாரத்தில் திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்:  நடிகர் கருணாஸ் எச்சரிக்கை

ஜெய் பீம் படத்தில்  போலீஸ் அதிகாரியாக வரும் வில்லன் பெயர் குருமூர்த்தி என்று வைக்கப்பட்டதற்கும் அவரது வீட்டில் அக்னி சட்டி கலசம் இருந்ததையும் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் அந்த காலண்டர் மாற்றி அமைக்கப்பட்டது. இதனையடுத்து படம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு நடிகர் சூர்யாவும் விளக்கம் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக பேசிய சர்ச்சை கருத்து இந்த விவகாரம் மேலும் பூதகரமாக வெடித்தது. இந்த சர்ச்சையில் சூர்யாவிற்கு ஆதரவாக திரையுலகினர் மற்றும் சமூகவலைதளங்களில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கருணாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூர்யா தவறை சரி செய்தபின்னரும் வன்மத்துடன் மீண்டும் மீண்டு சீண்டினால் திரையுலகினர் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார். நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி இணையதளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை அவர்களின் அறப்போராட்டத்தை மெய்யாக படம் பிடித்ததால் வெற்றியடைந்தது. ஆனால் வம்படியாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் பாமகவினர் அராஜகம் செய்கின்றனர். இந்த திரைப்படத்தை சாதி ரீதியான சிக்கலுக்குள் அடைக்கின்றனர். மீண்டும் மீண்டும் வீண்வம்பு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு சமுதாயத்தை புண்படுத்தும்படியான காட்சிப்படம் திரைப்படத்தில் இடம் பெற்றதாய் பாமகவினர் குரல் கொடுத்தனர். அதை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா அந்த காட்சியை உடனடியாக நீக்கி விட்டார். பிரச்சனை முடிந்தது ஆனால் மீண்டும் மீண்டும் பாமகவினர் வம்படி செய்வதும், திரைப்படச் சுவரொட்டிகளை கிழிப்பதும், திரை அரங்கங்களில் படம் ஓட விடாமல் தடுப்பதும் அபத்தத்தின் உச்சம். தொடர்ந்து இதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவதும். சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு எல்லாம் என்ன அரசியல் அறம் என்று புரியவில்லை. ஏதாவது ஒன்றில் அரசியல் சூழலில் சறுக்கினால் அடுத்து உடனே ஏதாவது செய்தி பரபரப்பாக பேச வேண்டும் என்ற அரசியல் நோக்கில் இப்போது பாமக ஜெய்பீம் திரைப்படத்தை பயன்படுத்தி இறங்கியுள்ளது.

அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு நடிகர் சூர்யா தமிழ் சமூகத்திற்கு பங்காற்றுகிறார். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் பணிசெய்து பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் உறுதியாக நிற்கிறார். ஜெய்பீம் திரைப்படத்தோடு அவர் நின்றுவிடவில்லை அதற்கும் மேலாக அந்த படத்தில் வாழ்ந்த இருளர் சமூக மேம்பாட்டிற்கு ஒரு கோடி நிதி தருகிறார். இப்படிப்பட்ட மனித நேயரை சமூக அக்கறை கொண்ட கலைஞனை இனி விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கருணாஸ் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணை தலைவர் என்ற அடிப்படையில் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.