என்னது...’கோல்டு காபி’ முதல்...’பலாப்பழ ஐஸ்கிரீம்’ வரையா...! மக்களுக்கு ஐஸ் வைக்கும் ஆவின்!!

என்னது...’கோல்டு காபி’ முதல்...’பலாப்பழ ஐஸ்கிரீம்’ வரையா...! மக்களுக்கு ஐஸ் வைக்கும் ஆவின்!!

ஆவின் நிறுவனம் புதிய முயற்சியாக 10 புதிய பொருட்களை வெளியிட உள்ளது.

ஆவின் நிறுவனம்:

தமிழ்நாட்டில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு தரம் வாய்ந்த பொருட்களை வழங்கி பால் விற்பனையில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அதிலும் சமீபகாலமாகவே ஏராளமான புதிய உணவுப்பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது ஆவின் நிறுவனம்.  

சமீபத்திய ஆவின் பொருட்கள்:

ஆவின் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒயிட்னர் போன்ற புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மொத்தமாக  இந்த நிறுவனத்தின் சார்பில், ஆவின் பால், ஆவின் தயிர், ஆவின் பால்க்கோவா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆவின் நிறுவனம் மூலம் 1 லிட்டர் மற்றும் அரசி லிட்டர் தண்ணீர் பாட்டில்களும், சத்துமாவும் விற்கப்படும் என்றும் அத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்தார்.

புதிய 10 பால் பொருட்கள்:

இந்நிலையில், நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு 10 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து விற்பனையில் விட ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. என்னென்ன பொருட்கள் என்பதை வாங்க பார்க்கலாம்...

  1.    பலாப்பழ ஐஸ்கிரீம்
  2.    வெள்ளை சாக்லேட்
  3.    Cold Coffee
  4.    வெண்ணெய் கட்டி
  5.    பாஸந்தி
  6.    ஆவின் ஹெல்த் மிக்ஸ்
  7.    பாலாடைக் கட்டி
  8.   அடுமனை யோகர்ட்
  9.   ஆவின் பால் பிஸ்கட்
  10.   ஆவின் வெண்ணெய் முறுக்கு உள்ளிட்ட 10 பொருட்களை சந்தை படுத்துவதற்கு ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி:

இந்த 10 பால் பொருட்களும், சென்னை அம்பத்தூர் பால் பண்ணையிலும், ஊட்டியில் உள்ள பால் பண்ணைகளிலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த பொருட்களை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில், வரும் 20-ஆம் தேதி பால் வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்வதுடன், அதன் விற்பனையையும் தொடங்கி வைக்கிறார்.