விலகிய அதிமுக; கொண்டாடிய பாஜக!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினா் இனிப்பு வழங்கியும், பாட்டாசு வெடித்தும் கொண்டாடினா். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பள்ளி பாளையம் பிரிவு சாலை பகுதியில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அப்போது அவா்கள் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று முழக்கங்கள் எழுப்பினா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் பாஜக நிா்வாகிகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனா். தொடா்ந்து அவா்கள் வெள்ளை தாளில் பாஜக - அதிமுக கூட்டணி முறிவு ஏற்பட்டது என்ற வாசகத்தை எழுதி அதை இரண்டாக கிழித்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். 

இதையும் படிக்க:உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!