பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது பாஜகவுக்கு மரியாதையும் நம்பிக்கையும் உண்டு: அண்ணாமலை

பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது பாஜகவுக்கு மரியாதையும் நம்பிக்கையும் உண்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது பாஜகவுக்கு மரியாதையும் நம்பிக்கையும் உண்டு: அண்ணாமலை

சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஹெச்.ராஜாவை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், பாஜக மேலிடம் ஹெச்.ராஜாவின் பேச்சை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து, அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.