விரைவில் விசாரிக்கப்படுகிறார் எச்.ராஜா... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தகவல்

எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் தெரிவித்த  குற்றச்சாட்டு குறித்து   விசாரிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

விரைவில் விசாரிக்கப்படுகிறார் எச்.ராஜா... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தகவல்
ம.பொ. சிவஞானத்தின் 116வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் ம.பொ.சிவஞானத்தின் படத்திற்கு எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ம.பொ சிவஞானத்தின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், 
 
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை போற்றுவது பாஜகவின் வழக்கம், அந்த வகையில் ம.பொ. சிவஞானத்தை 116வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும்.
 
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என விசிக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பஞ்சமி நிலங்களை மீட்க பட வேண்டும் என பாஜக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருந்தோம்  பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.
 
பாஜக நிர்வாகிகள் மீது  பாலியல் புகார் தொடர்பாக தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜகவில் அதுபோல் எந்த நிகழ்வும் நடக்கவில்லை எனவும், அது தொடர்பாக தனியார் பத்திரிகைக்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழக நிதி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போல் பெட்ரோல் டீசல் விலையில் 5 ரூபாயை முதலில் குறைக்க வேண்டும் என கூறினார்.
 
எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அது குறித்து விசாரிக்கப்படும் என எல். முருகன் தெரிவித்தார். மா பொ சி குடும்பத்தின் சார்பில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மா.பொ.சி மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.