”சாவர்க்கர் பிறந்தநாள் அன்று திறந்ததாலேயே, அந்த நாளை நாங்கள் கருப்பு நாளாக பார்க்கிறோம்” - திருமாவளவன்!
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா, எங்களுக்கு கருப்பு நாள் தான் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 28 ஆம் தேதி சாவர்க்கரின் பிறந்த நாளையொட்டி, புதிய பாராளுமன்ற கட்டடத்தை எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல். திருமாவளவன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சிதம்பரம் வந்தார். முன்னதாக, செய்தியாளர்களுக்கு சந்தித்த அவரிடம், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், புதிய பாராளுமன்றம் என்பது அவர்களின் கனவு திட்டங்களில் ஒன்று. அவர்கள் விரும்புகிற இந்து ராஷ்டிரத்திற்கான அடையாளமாக புதிய பாராளுமன்றத்தை கட்டி இருக்கிறார்கள். இதற்கு சான்றாக அவர்களின் கொள்கை ஆசானாக இருக்கின்ற சாவர்க்கரின் பிறந்தநாளில் அந்த கட்டிடத்தை திறந்து வைத்திருக்கிறார்கள். இது அவருக்கு சமர்ப்பணம் செய்ததாகவே பார்க்க முடிகிறது.
இதையும் படிக்க : கலைஞர் நூற்றாண்டு விழா: சிறப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!
சாவர்க்கர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்காதவர். ஜனநாயகத்தை அங்கீகரிக்காதவர். அவரது கனவை நினைவாக்க கூடிய பாஜக, சங்பரிவார் அமைப்புகள் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை அலட்சியம் செய்வதில் குறியாக இருக்கிறார்கள். அதனுடைய அடையாளமாகதான் நாடாளுமன்ற கட்டிடத்தை எழுப்பி இருக்கிறார்கள். சாவர்க்கர் பிறந்தநாள் அன்று அதை திறந்து வைத்ததாலேயே அந்த நாளை நாங்கள் கருப்பு நாளாக பார்க்கிறோம் என்று திருமாவளவன் கூறினார்.