குப்பை கிடங்காக மாறும் பக்கிங்ஹாம் கால்வாய்.. மாமல்லபுரம் பேரூராட்சி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படுவதை எதிர்த்த வழக்கில் மாமல்லபுரம் பேரூராட்சி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பைக் கிடங்காக பயன்படுத்தப்படுவதாக கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாமல்லபுரம் பேரூராட்சி தரப்பில், உலக பிரசித்திபெற்ற மாமல்லபுரம் பகுதியை சுகாதாரமான முறையில் பராமரித்து வருவதாகவும், குப்பைக்கிடங்கு அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்றும், அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்தே குப்பைக்கிடங்கு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என தெரியவருவதாக கூறிய நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை ஒருவாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.