வடசென்னையில் கஞ்சா விற்பனை......மேலும் ஒரு கும்பல் கைது.......

சென்னை வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு கும்பலை ராயபுரம் தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னையில் கஞ்சா விற்பனை......மேலும் ஒரு கும்பல் கைது.......

சென்னை ராயபுரம், காசிமேடு,  மீன்பிடி துறைமுகம் ஆகிய பகுதிகளில் தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்கும் பணியல் ஈடுபட்டனர். 

இந்நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அத்திப்பேடு பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி 2  பெண்கள் உட்பட 3 பேர் அமர்ந்திருந்தனர். உடனடியாக அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், அவர்கள் காசிமேடு பகுதியை சேர்ந்த சத்யா(34), சுபா(34) மற்றும் முகமது அலி(19) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையாளர்களாக இருந்து வந்ததும், திருவொற்றியூரை சேர்ந்த காயத்ரி(34) என்ற பெண்ணிடம் கஞ்சா வாங்குவதற்காக காசிமேட்டில் காத்திருந்ததும் தெரியவந்தது. 

மேலும் காயத்ரியை பிடிக்க திட்டமிட்ட தனிப்படை போலீசார் ஏற்கனவே பிடிபட்டவர்களை வைத்து 2 கிலோ கஞ்சா வேணும் என காயத்ரியை தொடர்பு கொண்டுள்ளனர். காயத்ரியும் கஞ்சாவை எடுத்து கொண்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளத்தின் அருகே வந்தபோது அவரை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள காயத்ரி வீட்டிற்கு சென்று அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டதில், காயத்ரி ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து கஞ்சாவை ரயில் மூலமாக திருவொற்றியூர் கொண்டு வந்து வடசென்னை பகுதி முழுவதும் சிறுவியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் சத்யா மற்றும் முகமது அலி ஆகிய இருவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிவந்தது. மேலும் பிடிபட்ட 4 பேரிடமும் தொடர்ந்து கஞ்சா விற்பனை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.