SI தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு: TNUSRB பதிலளிக்க உத்தரவு!

SI தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு: TNUSRB பதிலளிக்க உத்தரவு!

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த  பொதுநல மனுவில், தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டதாக தெரிவித்துள்ள்னர்.

 சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி திருத்த அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும், சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா ம்ற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: மாற்றுத் திறனாளிகள் விபத்து நிவாரணம் 2 லட்சமாக உயர்வு!