தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
Published on
Updated on
1 min read

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை நிலவரம் குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை நீட்டிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனத் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை லட்சதீவு, தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com