ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் -  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், அதிக கட்டணம் வசூலித்து பயணிகள் ஏமாற்றப்படுவதை தடுக்க, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கடந்த 2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறினார். 

இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியிருந்தாலும் அவை செயல்படுவதில்லை என்றும், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகளிடம் தங்கள் விருப்பம் போல கட்டணம் வசூலிப்பதாகவும் குறை கூறினார்.

இதையடுத்து, மீட்டர் பொருத்தியிருந்தும் அவற்றை செயல்படுத்தாத  ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்து துறையும், காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மீட்டரை செயல்படுத்தாத ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பெட்ரொல் - டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளை வடிவமைத்து பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள், அரசுக்கு யோசனை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.