பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்... நூதன தண்டனை வழங்கிய உயர் நீதிமன்றம்!
பைக் ரேசில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த பிரவீன் கடந்த 20ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அளித்த புகாரில் பிரவீன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி பிரவீன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அஜித்குமார் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால் பைக் ரேசில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாக காவல்துறை தரப்பில், தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிரவீனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.