ஜவ்வரிசியில் கலப்படமா..? ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு...

கலப்படம் செய்து ஜவ்வரிசி விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜவ்வரிசியில் கலப்படமா..? ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு...

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு சேலம், ஈரோடு. தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜவ்வரிசி உற்பத்திக்காக பலவிதமான வேதிப்பொருட்களை கலந்து கலப்பட சவ்வரிசியை பலர் விற்பனை செய்வதால், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்வதும், இயற்கையாக ஜவ்வரிசி உற்பத்தி செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜவ்வரிசி உற்பத்திக்கு வேதிப்பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத நிலையில் கடந்த 2015 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்ததில், ஜவ்வரிசி உற்பத்தி செய்வது தொடர்பாகவும், கலப்படத்தை தடுக்கவும் நீதுமன்றம் பல உத்தரவுகளை வழங்கியது.

இந்நிலையில் உணவுத்துறையினர் ஈரப்பதத்துடன் இருக்கும் மரவள்ளி கிழங்கு மூலம் தான் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு கலப்பட ஜவ்வரிசி செய்வதாகக் கூறி அதனை விற்பனை செய்வதற்கு தடை விதித்ததோடு, அதை வைத்திருக்கும் ஆலைகளையும் சீல் வைத்தாக தெரிவித்தார்.

இந்த மனு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகிலன் ஜவ்வரிசி மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி ஒன்பது வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து   கடைகளில் விற்பனை  செய்யப்பட்ட மூன்று வகையான ஜவ்வரிசி பாக்கெட்டுகளை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த நீதிபதி  உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம்  வழங்கினார்.

இந்த மாதிரிகளை கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்து கலப்படம் உள்ளதா? என்பது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி வழக்கின் விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.