தீபாவளியை முன்னிட்டு அறிவுரை வழங்கிய சென்னை பெருநகர காவல் துறை!

சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை வலியுறுத்தியுள்ளது. 

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களுக்கு, 19 அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில், ரசாயனம் கலந்த பட்டாசுகளைத் தவிர்த்து, சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமைப் பாட்டாசுகளை மட்டுமே விற்கவும், வெடிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

அத்துடன், உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, காலை 6 மணிமுதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணிமுதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். குடியிருப்புகளுக்கு, 4 மீட்டருக்கு அப்பால் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி...!

தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்வதோ, வெடிப்பதோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ள காவல் துறை,  குடிசை மற்றும் மாடி குடியிருப்புகள் அருகில் ராக்கெட் போன்ற பாட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று வலியுறுத்திள்ளது. 

கால்நடைகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ள சென்னை காவல் துறை, அசம்பாவிதம் ஏற்படால், அவசர உதவிக்கு 100, தீயணைப்புத்துறைக்கு 101, ஆம்புலன்ஸ்க்கு 108 உள்ளிட்ட எண்களுக்கு அழைக்க அறிவுறுத்தியுள்ளது.