சென்னை - யாழ்பாணம் விமான சேவை... இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது...!

சென்னை - யாழ்பாணம் விமான சேவை... இரண்டரை ஆண்டுகளுக்கு  பிறகு மீண்டும் தொடங்கியது...!

சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை, இன்று முதல் தொடங்குகிறது. ஏற்கனவே வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த இந்த விமானங்கள் இதன் பின்னர், வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு, கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜாஃப்னா எனப்படும், யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் நிலையத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று, பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன.

இதை அடுத்து ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்பாணத்திற்கு விமான சேவையை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய ரக ஏ டி ஆர் விமானங்களை இயக்கி வந்தது. இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு பரவியது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஊரடங்குகளையும் அமல்படுத்தின. இதை அடுத்து சென்னை - யாழ்ப்பாணம்-  சென்னை விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில், ரத்து செய்யப்பட்டு இருந்த, வெளிநாட்டு விமான சேவைகளை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை, விமான சேவை மட்டும் இதுவரை தொடங்காமல் இருந்து வந்தது. இதை அடுத்து பல்வேறு அமைப்புகள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு சென்னையில் இருந்து விமான சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

இதை அடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த  விமான சேவைகள், இன்றிலிருந்து மீண்டும் தொடங்குகிறது. ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனம், சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவைகளை தொடங்கியுள்ளன. ஏற்கனவே வாரத்தில் 3  நாட்கள் மட்டும், யாழ்ப்பாணத்திற்கு ஓடிக்கொண்டிருந்த விமான சேவைகள் தற்போது, வாரத்தில் 4  நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இந்த விமான சேவைகள்  நடக்கும். காலை 9:25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 10:50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைகிறது. மீண்டும் காலை 11:50 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு பகல் 1:15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது.

சென்னையில் இருந்து யாழ்பாணத்துக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கியது, சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதோடு இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்று சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் ஏர்  நிறுவனம், 64  சீட்டுகள் உடைய, ஏ டி ஆர் எனப்படும் சிறிய ரக விமானத்தை இயக்கியது. முதல் நாள் என்பதால் பயணிகளுக்கு விரிவான அறிவிப்பும் இல்லாததால், இன்று மிகவும் குறைவான பயணிகளாக 12 பயணிகள் மட்டுமே சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்தனர். இன்று முதல் நாளில் விமானம் காலதாமதமாக காலை 10 .15 மணிக்கு யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது.

இதையும் படிக்க : “நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்..” - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்