தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றி வருவோரை கவுரவித்து, ஆண்டு தோறும் பேரறிஞர்கள், தலைவர்கள் பெயரில் தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 

அந்தவகையில் 2021ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதாளர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அதன்படி 2021ம் ஆண்டிற்கான, பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சிங்காரவேலர் விருது கவிஞர் மதுரக்கூர் இராமலிங்கத்திற்கும், தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது  இரா. சஞ்சீவிராயருக்கும் வழங்கப்படவுள்ளது.இதுதவிர சி.பா ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேவநயேப்பாவாணார் விருது கு. அரசேந்திரனுக்கும்,  உமறுப்புலவர் விருது நா.மம்மதுவுக்கும், வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதுமட்டுமல்லாது கி.ஆ.பெ விருது ம.இராசேந்திரனுக்கும், கம்பர் விருது பண்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கும், ஜி.யு போப் விருது ஏ.எஸ். பன்னீர் செல்வத்திற்கும் அளிக்கப்படவுள்ளது. 

மறைமலையடிகள் விருது சுகி. சிவத்திற்கும், இளங்கோவடிகள் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாச பண்டிதர் விருது ஞான.அலாய்சியஸுக்கும் வழங்கப்படவுள்ளது. 

மேலும் இந்த விருது பெறுவோருக்கு நடப்பாண்டு முதல், விருதுக்கான பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், இதனுடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  மற்றும் தகுதியுரை ஆகியன வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.