முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டிய வைகோ...! எதற்காக தெரியுமா?

முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டிய வைகோ...! எதற்காக தெரியுமா?

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதலமைச்சர் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளார் என மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.

சாமிக்கண்ணு திருவுருவப்படம் திறப்பு விழாவில் வைகோ:

தருமபுரி மாவட்டத்தில், மதிமுக சார்பில் நடந்த முன்னாள் மாவட்ட அவைதலைவர் சாமிக்கண்ணு திருவுருவப்படம் திறப்பு விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உள்ளிட்ட திமுக, விசிக, கம்யூனிஸ்ட், திக, மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் துரிதமாக செயல்பட்டார்:

அதன்பின் செய்திளார்களிடம் பேசிய அவர், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதலமைச்சர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். முதலில்  கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர், உடனடியாக டிஜிபியை தொடர்புகொண்டு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்...உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சொல்வது என்ன?

இந்த உத்தரவையடுத்து,  கார் வெடி விபத்தில் சிதறி கிடந்த உடல் யாருடையது என்பதை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து, அவருடன் தொடர்புடைய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, துரிதமாக செயல்பட்ட முதலமைச்சர், இந்த வழக்கை விசாரிக்க என்ஐஏ-வுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றது.

வைகோ குற்றச்சாட்டு:

ஆனால், இந்த சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக்கி மதக்கலவரத்தை உருவாக்க நினைப்பவர்கள், திராவிட சித்தாந்தத்தை உடைக்க நினைப்பவர்கள் இஷ்டத்திற்கு பேசி வருவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்து பேசினார்.