2 ரவுடிகளை என்கவுண்டர் செய்த போலீசார்... போலி என்கவுண்டர் என தந்தை புகார்!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்  கொலை செய்யப்பட்டனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம்  செங்குன்றம், பாடியநல்லூரில் நடைப்பயிற்சி சென்ற அதிமுக பிரமுகர் பார்த்திபன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கூலிப் படைத் தலைவன் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரை தனிப்படைக் காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள பூதூர் மாரம்பேடு பகுதியில் சென்ற போது இரண்டு ரவுடிகளும் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர்.  

ரவுடிகளின் தாக்குதலால் மூன்று போலீசார் காயமடைந்த நிலையில்,  இரண்டு ரவுடிகளையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

காயமடைந்த காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்லப்பட்ட ரவுடிகளின் உடல்களும் ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

என்கவுண்டர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜ் தனது மகனை போலீசார் போலி என்கவுண்டர் செய்யவுள்ளதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.