கூட்டுறவு சங்கங்களின் பதவிகாலத்தில் குளறுபடி; தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம், உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து துவங்குகிறதா? முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து துவங்குறதா? என்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தான் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாக கூறி, கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும்,   நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின் பதவிக்காலம் அமலுக்கு வருவதால், 2024ம் ஆண்டு வரை கூட்டுறவு சங்க நடவடிக்கையில் தலையிட தடை விதிக்கக் கோரியும், கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரியும்  கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி,  தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, பதவிக்காலம் துவங்குவதாகக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சின்னசாமி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தான், உறுப்பினர்களின் பதவிக்காலம் துவங்குவதாகவும், இந்த வழக்கில் 2019ம் ஆண்டு ஜூன் மாதம், முதல் கூட்டம் நடந்ததால், அதன் பிறகே பதவிக்காலம் துவங்கும் எனவும், 2024ம் ஆண்டு ஜூன் வரை பதவிக்காலம் உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர், 2018ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின என்பதால், அன்றைய தினம் முதல் பதவிக்காலம் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து பதவிக்காலம் துவங்குகிறதா? முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து துவங்குகிறதா? என பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை நியமித்த உத்தரவை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!