"பார் கவுன்சில் பதிவிற்கு அதிக கட்டணம்" தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு...!!

"பார் கவுன்சில் பதிவிற்கு அதிக கட்டணம்" தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு...!!

வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவர் மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்ட படிப்பு முடித்த பின்னர் வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு கட்டணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவர்களிடம் 11,100 ரூபாயும், இதர பிரிவு மாணவர்களிடம் இருந்து  14,100 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக கூறியுள்ளார். 

சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பட்டதாரிகளால் இந்த தொகையை செலுத்துவது சிரமம் எனவும் அரசு சட்ட கல்லூரிகளில் ஓராண்டுக்கான படிப்பு கட்டணமே 500 ரூபாயை தாண்டாத நிலையில் இவ்வளவு அதிகமாக பதிவு கட்டணம் வசூலிப்பதாக கூறியுள்ளார். 

சட்டபடி பதிவு கட்டணமாக 750 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டுமெனவும் படிப்பு முடித்த பின்னர் பதிவு செய்வதற்கு காலதாமதமானால் அதற்கென கூடுதலாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.  

வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனு குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்க:மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?