தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் வகுப்புகள், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்ளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பின்பு ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும்.,அனைத்து கல்லூரிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகளும் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 50 சதவீத பார்வையாளர்களுடன் வரும் 23ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்கலாம் என்றும்., வரும் 23ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்., இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த அனைத்து கடைகளின் செயல்பாடுகளும் வரும் 23ஆம் தேதி முதல் 10 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனை சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும்., ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து சேவையை தொடங்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்.,நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்., தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்., செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.