இரட்டை வேடம் போடும் திமுக - காங்கிரஸ்...குற்றம் சாட்டும் அன்பழகன்...!

இரட்டை வேடம் போடும் திமுக - காங்கிரஸ்...குற்றம் சாட்டும் அன்பழகன்...!

மாநில அந்தஸ்து விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில கோரிக்கை:

யூனியன் பிரதேசமான புதுச்சேரியை மாநிலமாக அறிவிக்கக்கோரி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏனென்றால், மாநில அந்தஸ்து என்ற ஒன்று இல்லாததால் மக்களுக்கான திட்டத்தை அரசால் தடையின்றி செயல்படுத்த முடியவில்லை என்பதால் இந்த கோரிக்கையை புதுச்சேரி அரசும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மக்கள் பிரச்னையாக விஸ்வரூபம்:

இந்நிலையில் உப்பளத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனை தற்பொழுது மக்களின் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.  

இதையும் படிக்க: வீட்டை விட்டு வெளியே வந்தால் கால் இருக்காது...அமைச்சர் கீதா ஜீவனுக்கு மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா!

அன்பழகன் வலியுறுத்தல்:

மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்காததால் மக்களுக்கான திட்டத்தை தடையின்றி  செயல்படுத்த முடிவதில்லை என்று கூறிய அன்பழகன், மாநில அந்தஸ்து விவகாரத்தில் கூட்டணியில் உள்ள பாஜக தனது முடிவை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இரட்டை வேடம்: 

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியின் மாநில அந்தஸ்து விவகாரத்தில் திமுகவும் - காங்கிரசும் இரட்டை வேடம் போடுவதாகவும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.