"திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது" முன்னாள் அமைச்சர் பேட்டி!

அதிமுக பா.ஜ.க கூட்டணி முறிவால் திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் சிறுபான்மை நலப்பிரிவின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் தொண்டர்கள் விருப்பப்படி, பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடிவெடுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க உடன் எப்போதும் கூட்டணி இல்லை என தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவித்தார். திமுக கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக் கொள்ளும் நிலையில் இருந்த சிறுபான்மை கட்சிகள் இன்று டிமாண்டை ஏற்றியுள்ளதாகவும், கெஞ்சி கூத்தாடி கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தக்க வைத்துள்ளதாகவும் அவர் பேசினார்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் தான் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பு இருந்ததாகவும், திமுக ஆட்சியில் தான் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர், தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் எனக் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு நன்மை கிடைக்கும் என சொன்னார்கள். ஆனால் சிறுபான்மையினர் கல்வி, சமூகம் , பொருளாதாரம் என எதிலும் ஏற்றமடையவில்லை. இதை சிறுபான்மை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என கூறினார்.

இதையும் படிக்க: லாட்டரி அதிபர், மருமகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!