அரசு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் பங்கேற்க தடையில்லை: நீதிமன்றம் உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் பங்கேற்க தடையில்லை என அதிமுக தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் பங்கேற்க தடையில்லை: நீதிமன்றம் உத்தரவு

கோவை மாவட்டம், உடையம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில்,நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால், கோவை நகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான பையா ஆர்.கிருஷ்ணன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி போல, அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கிவருகிறார் வருதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் தலைமையேற்று, நிவாரண உதவிகளை வழங்கியதாகவும், இது சட்டவிரோதம் என்பதால், அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், தலைமையேற்கவும் தடை விதிக்க வேண்டும்  என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகுமார் தெரிவித்தார். வழக்கமாக, அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்ற போதும், இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்ட செயலாளருக்கு தடைவிதித்து உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.